செய்திகள்

அரசுக்கு நெருக்கடி கொடுக்க மாட்டோம்: முதல்வரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தகவல்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் அரசுக்கு நெருக்கடி கொடுக்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்தார்.

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, ஓ.பி.எஸ். அணியினர் சசிகலா குடும்பத்தை கட்சி பணியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்பன உள்பட பல நிபந்தனைகள் விதித்தனர்.

இதை ஏற்று சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்து அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.

அதன்பின்னர் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இணைப்பு முயற்சி தோல்வி அடைந்தது. அதன்பிறகு டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் 40 நாள் சிறை வாசத்துக்குப் பின் விடுதலையான டி.டி.வி.தினகரன், மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபட உள்ளதாக கூறியதால் அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.