செய்திகள்

மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: முதல்வர் பழனிச்சாமி

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

திருவாரூர்:

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. இந்த தகவலுக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழக அரசியல் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழக அரசு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிச்சாமி திருவாரூர் சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பழனிச்சாமி பேசியதாவது:-

கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. கர்நாடகம் அணை கட்டுவதை அம்மாவின் அரசு ஒரு போதும் அனுமதிக்காது. கர்நாடக அரசு அணை கட்ட தமிழக அரசு சம்மதம் தெரிவித்ததாக வந்த செய்திகள் உண்மைக்கு மாறானது.

இது தொடர்பான வழக்கு சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கர்நாடக தரப்பு மூத்த வழக்கறிஞர் நரிமன் தமிழகத்திற்கு உரிய நீரை சேமித்து வழங்க புதிய அணை கட்ட சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  

அதற்கு தமிழக அரசின் வழக்கறிஞர், சமதள பரப்பாக உள்ள தமிழகத்தில் அணை கட்டுவது சிரமமானது. இருப்பினும் கர்நாடக அரசு தற்போது உள்ள அணையிலே நீரை சேமித்து வைத்து பகிர்ந்து அளிக்க வேண்டும் என வாதாடினார். மேலும் இது தொடர்பான வாதத்தை பின்னர் தனியே மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அப்போது, கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக வலுவான வாதங்களை முன் வைத்து தமிழக அரசு வாதிடும்.

இவ்வாறு கூறினார்.