லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி மற்றும் நூர்புர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. கைரானாவில் ராஷ்ட்ரிய லோக் தளமும், நூர்புரில் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றன.
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டதே பாஜகவின் தோல்விக்கு காரணம் என அனைவரும் கூறிக்கொண்டிருக்க, அம்மாநில பாஜக மந்திரி லக்ஷ்மி நாராயன் சவுத்திரி வித்தியாசமான காரணத்தை கூறியுள்ளார். “கோடை விடுமுறை என்பதால் தொண்டர்கள் அனைவரும் குழந்தைகளுடன் வெளியூருக்கு டூர் சென்றுவிட்டனர். இதனால், இடைத்தேர்தலில் தோற்றோம்” என லக்ஷ்மி நாராயன் சவுத்திரி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.