நம்பர் ஒன் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறோம் என்ற அச்சம் துளியளவு கூட ஆப்கானிஸ்தான் வீரர்களிடம் இல்லை. மேலும், சுழற்பந்து வீச்சில் இந்தியாவை விட நாங்கள் சிறந்தவர்கள் என்று அந்த அணியின் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் கூறுகையில் ‘‘நாங்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், மொகமது நபி, ரஹ்மத் ஷா, ஜகிர் கான் போன்ற தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளோம் என்பதை உலகமே அறியும். இவர்களை பின்பற்றி ஏராளமான சுழற்பந்து வீச்சாளர்கள் உருவாகி வருகிறார்கள். இது சிறப்பான விஷயம். என்னுடைய கருத்தின்படி, இந்தியாவை விட நாங்கள் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளோம்.