விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி 
செய்திகள்

ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனியார் மயமாக்கப்படும் -விமான போக்குவரத்து துறை மந்திரி உறுதி

ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனியார் மயமாக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடன் சுமை இருப்பதால் ஏர் இந்தியாவால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. 

எனவே ஏர் இந்தியாவின் பங்குகள் முழுவதையும் தனியாருக்கு விற்பனை செய்து, தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சி அல்லது விற்பனை செய்யும் முயற்சி தோல்வி அடைந்தால், ஏர் இந்தியா நிறுவனத்தை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்த விவகாரம் குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறுகையில், ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனியார் மயமாக்கப்படும் என தெரிவித்தார்.

‘குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு நாங்கள் அடிமையாகவோ, பலியாகவோ விரும்பவில்லை. கூடிய விரைவில் தனியார்மயமாக்க தீவிரமாக முயற்சி செய்கிறோம். எங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், தனியார் மயமாக்கப்பட வேண்டும் என நான் முன்பே கூறினேன். விமானக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் திட்டம் எதுவும் இல்லை’ என்று மத்திய மந்திரி கூறினார்.