புதுடெல்லி:
கட்சிக்கு முழு நேரமான, பொறுப்புகளை ஏற்க கூடிய தலைவர் தேவை, கட்சிக்குள் அமைப்பு ரீதியிலான மாற்றங்களை கொண்டுவர வேண்டும்,
உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் உள்பட பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் கடந்த 23-ந் தேதி கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.
சோனியா காந்திக்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில் குலாம் நபி ஆசாத், கபில் சிபில், சசீ தரூர், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் 23 முக்கிய தலைவர்களின் கையெழுத்துக்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது. இந்த கடிதம் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் புயலை கிளப்பியுள்ளது.
மேலும், இந்த கடிதத்தை எழுதியவர்கள் பாஜக உடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக சில காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.
ஆனால் இந்த செய்திகள் பொய் என காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் கபில் சிபில் பாஜக-வில் இணைய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய குடியரசு கட்சியின் தலைவரும் மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறுகையில்,’ குலாம் நபி ஆசாத்தும், கபில் சிபிலும் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பல்வேறு வேலைகளை செய்துள்ளனர். ராகுல் காந்தி இவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினால் அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக வேண்டும்.
குலாம் நபி ஆசாத் மற்றும் கபில் சிபிலை வரவேற்க பாஜக தயாரக உள்ளது’ என்றார்.