தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது.
திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்திருந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை உடனே வெளியே கொண்டு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் நிதானமாக பணியை தொடங்கினர்.
இந்நிலையில், கடும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் குகையில் சிக்கியிருந்த 12 மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட 13 பேர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குகைக்குள் சிறுவர்களுடன் சிக்கியிருந்த பயிற்சியாளர் பௌத்த மத துறவியாக இருந்தவர், அந்த அனுபவம் தான் சிறுவர்களை பீதியடையாமல் பார்த்துக்கொள்ள உதவியது என இந்தியாவிற்கான தாய்லாந்து தூதர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாய்லாந்து தூதர் அபிரட் சுகோந்தபிரோம், ‘குகையில் சிறுவர்கள் சிக்கிக்கொண்ட போது அவர்களை மீட்கவும், அவர்களின் நலனை பற்றி விசாரித்தும் பல இந்தியர்கள் தாய்லாந்து தூதரகத்தை தொடர்பு கொண்டனர்.
குகையில் சிக்கிக்கொண்ட குழந்தைகளின் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கும் இந்தியர்களுக்கு நன்றி. உங்கள் அன்பை என்றும் மறக்க முடியாது. தற்போது குகைக்குள் இருக்கும் மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டு வருகிறார்கள், மீண்டும் கனமழை பொழிவதற்குள் மாணவர்களை மீட்க வேண்டும் என கடும் முயற்சி எடுத்தோம் அதன் பலனாக இன்று குகைக்குள் இருந்த அனைவரும் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.