செய்திகள்

நீர் நிலை ஆக்கிரமிப்பு விவகாரம்: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள்

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக குழு அமைத்து ஆய்வு நடத்தமாறு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மூலக்கரை, ராயபாளையம், சின்னமேடு, புதுக்காலனி, காரப்பாறை, செங்கோடம் பள்ளம், தெற்குபள்ளம், ராமமூர்த்தி வீதி, பழைய பூந்துறை ரோடு, மரப்பாலம், பிச்சைக்காரன்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு இன்று திரண்டு வந்தனர்.

அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வரதராஜன், மாவட்ட செயலாளர் ரகுராமன் ஆகியோரும் வந்திருந்தனர்.

அவர்கள் மாநகராட்சி முன்பு சிறிது நேரம் அமர்ந்தனர். பின்னர் அலுவலகத்துக்குள் சென்றனர். ஆனால் அங்கு மாநகராட்சி கமி‌ஷனர் இல்லை. எனவே அலுவலக உதவியாளரிடம் மனு கொடுத்தனர்.

நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் நாங்கள் வசிப்பதாக எங்களை காலி செய்ய கூறி மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் நோட்டீசு கொடுத்து வருகிறார்கள்.

நாங்கள் இந்த பகுதியில் 50 வருடமாக வசித்து வருகிறோம். ஆனால் எங்களை திடீரென காலி செய்ய சொன்னால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

நாங்கள் நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்தால் காலி செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் மாற்று இடம் தராமல் எங்களை காலி செய்ய சொல்ல வேண்டும்.

ஆக்கிரமிப்பில் இல்லாதவர்களுக்கும் நோட்டீசு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வசிக்கும் இடத்துக்கும் நீர் நிலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே சரியான ஆக்கிரமிப்புகள் பற்றி அறிய குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

நீர் நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை என்றால் அவர்களுக்கு பட்டா கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர். இதே கோரிக்கை மனுவை தாசில்தார் அலுவலகத்திலும் கொடுத்தனர்.

SCROLL FOR NEXT