செய்திகள்

இளங்கோநகரில் கழிவுநீர் வாய்க்காலில் செடி, கொடிகள் அகற்றப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நொய்யல் அருகே இளங்கோநகரில் கழிவுநீர் வாய்க்காலில் செடி, கொடிகள் அதிக அளவில் படர்ந்துள்ளது. இதை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை மலர்

வேலாயுதம்பாளையம்:

வேலாயுதம்பாளையம் - நொய்யல் நெடுஞ்சாலையில் இளங்கோ நகரில் குடியிருப்பு பகுதி அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வாரி பலமாதங்கள் ஆனதால் செடி, கொடிகள் அதிக அளவில் படர்ந்துள்ளது. இந்த செடி, கொடிகளை  அகற்றாததால், அவை கொசுக்கள் உற்பத்திக்கான முக்கிய காரணியாக மாறி வருகின்றன.

இதனால் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் கொசு தொல்லையால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, போன்ற பல்வேறு நோய்கள் மற்றும் மர்மக்காய்ச்சல் வரும் நிலை உள்ளது. ஏற்கனவே சிலர் காய்ச்சல் ஏற்பட்டு அவதியுற்று வருகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயில் அதிக அளவில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்றி பல்வேறு வகையான நோய்கள் பொதுமக்களை தாக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெங்குவை பரப்பும் கொசுக்களை அழிக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் இந்த நிலையில் அதிகாரிகளின் அலட்சிய போக்கு பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.