ராயபுரம்:
வண்ணாரப்பேட்டையில் போஜராஜன் நகர், சீனிவாசபுரம், மிண்ட் மாஸ்டர் கிட்டி உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன.
இப்பகுதி மக்கள் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
கடந்த 4 மாதத்திற்கு முன்பு சுரங்கபாதை அமைக்கும் பணி தொடங்கியது. ராட்சத இரும்பு தூண்கள் அமைத்து மண் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. இரவு பகலாக அங்கு வேலை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுரங்கபாதை பணி நடைபெறும் இடத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ரெயில்வே தண்டவாளம் சற்று உள்ளே இறங்கி உள்ளது. மண் சரிவு காரணமாக ஏற்பட்ட இந்த பாதிப்பால் அந்த பாதையில் ரெயில் போக்குவரத்தை இயக்குவது சரியாக இருக்காது எனக் கருதி மண்சரிவு ஏற்பட்ட பாதையில் ரெயில் நிறுத்தப்பட்டது. வேறுபாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டன. அந்த வழியாக செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மின்சார ரெயில்கள் மாற்றுப் பாதையில் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
மண் சரிவு ஏற்பட்டு இருப்பதால் ரெயில் போக்குவரத்தை சரி செய்ய அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அவர்கள் சுரங்கப்பாதை அமைக்கும் பகுதியில் உள்ள ரெயில்வே பாதையை ஆய்வு செய்தனர். அந்த பாதையில் போக்குவரத்து தொடங்கினால் பாதுகாப்பாக இருக்குமா? என தொழில் நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.
மாற்றுப்பாதைகளில் ரெயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.