கோத்தகிரி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கோத்தகிரி, குன்னூரில் 133 இடங்கள் அபாயகரமானது என்று கண்டறியப்பட்டு உள்ளது. அதில் கோத்தகிரியின் அக்கால், கட்டபெட்டு, கார்ஸ்வுட், சோலூர்மட்டம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை ஆகியவையும் அடங்கும். மழையின்போது ஏற்படும் இயற்கை பேரிடரை சமாளிக்க மாவட்டம் முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கையில் அனைத்து துறையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேவையான இடங்களில் பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரி, மரம் அறுக்க பயன்படும் மின்வாள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணி, தடுப்புச்சுவர் கட்டும் பணி, கால்வாய்களில் மண் அடைப்பை நீக்கும் பணி, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி போன்றவை நடைபெற்று நிறைவடைந்து உள்ளன. இதுகுறித்து உதவி கோட்ட பொறியாளர் சுப்பிரமணி கூறியதாவது:–
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த மாதம் பெய்த மழையால் சாலையோரம் அடர்ந்து வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் கேபிள் பதிக்க சாலையோரங்களில் தோண்டப்பட்ட குழிகளை கான்கிரீட் போட்டு மூடும் பணியும் நடக்கிறது. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவு பெறும். பலத்த மழையின்போது மண்சரிவு ஏற்படும் இடங்களில் பயன்படுத்த 1000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews