புதுடெல்லி:
உத்தரப்பிரதேசம் மாநிலம் அசம்கர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட அரிஷ் கான் (எ) ஜுனைத், இந்தியாவில் நடந்த ஐந்துக்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர் என்று கூறப்பட்டது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இவர் கடந்த 2008-ம் ஆண்டு போலீசார் நடத்திய என்கவுண்டரில் தப்பித்து ஓடிவிட்டார்.
30 பேரை பலிகொண்ட டெல்லி தொடர் குண்டிவெடிப்பு நடந்த 6-வது நாளில் போலீசார் இந்த என்கவுண்டரை நடத்தினர். இதில், அரிஷ் கான் தப்பித்து ஓடினாலும், இரு தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், இருவர் கைது செய்யப்பட்டனர்.
தப்பி ஓடிய அரிஷ் கான் தலைக்கு தேசிய புலனாய்வு முகமை 10 லட்சம் ரூபாய் விலை நிர்ணயித்தது. டெல்லி காவல் துறையும் 5 லட்சம் ரூபாய் விலை வைத்தது. இந்நிலையில், இன்று டெல்லியில் சிறப்புப்படை போலீசார் அரிஷ் கானை கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 22-ம் தேதி இந்தியாவின் பின்லேடன் என்று அழைக்கப்பட்ட குரேஷி டெல்லியில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.