செய்திகள்

வியாபம் ஊழல் தொடர்பாக மருத்துவ கல்லூரி தலைவர் கைது

ம.பி. மாநில அரசு வேலைவாய்ப்பில் பணி நியமனம் செய்து தொடர்பான வியாபம் ஊழலில் தொடர்புடைய போபாலை சேர்ந்த மருத்துவ கல்லூரி தலைவரை சி.பி.ஐ. இன்று கைது செய்துள்ளது. #Vyapamcase #JNChouksey #CBI

மாலை மலர்

புதுடெல்லி:

ம.பி. மாநில அரசு வேலைவாய்ப்பில் பணி நியமனம் செய்து தொடர்பான வியாபம் ஊழலில் தொடர்புடைய போபாலை சேர்ந்த மருத்துவ கல்லூரி தலைவரை சி.பி.ஐ. இன்று கைது செய்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் தொழில் முறை தேர்வு வாரியமான வியாபம் மூலம் மாநில அரசு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். மேலும் மருத்துவக்கல்லூரிகளுக்கு மாணவர்களை தேர்வு செய்யும் நுழைவுத்தேர்வுகளும் நடத்தப்பட்டன.

இந்த தேர்வுகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது. மேலும் இந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சுமார் 40 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தனர். இதனால் வியாபம் ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் போபாலில் உள்ள எல்.என். மருத்துவ கல்லூரியின் தலைவர் ஜெ.என்.சவுக்சேவுக்கும் தொடர்பு இருப்பதாக மத்தியப்பிரதேச மாநில மருத்துவ கல்லூரி இயக்குனரகம் குற்றம் சாட்டியது.

அவர் 2012-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் கட்ட மருத்துவ மாணவர் சேர்க்கையின் போது ஐந்து இடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த கல்லூரியில் 40க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருந்ததாகவும், மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு அந்த இடங்களை அவர் அதிக பணம் வாங்கிக்கொண்டு நிறப்பியதாகவும் மத்தியப்பிரதேச மாநில மருத்துவ கல்லூரி இயக்குனரகம் கண்டுபிடித்தது.

இந்த நிலையில், வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டபட்ட ஜெ.என்.சவுக்சேவை சி.பி.ஐ. போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #Vyapamcase #JNChouksey #CBI #tamilnews