செய்திகள்

பா.ஜ.க மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தின் பிரதிபலிப்பே தேர்தல் முடிவுகள் - ராகுல் காந்தி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இரு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க தோல்வியை தழுவியுள்ள நிலையில், பா.ஜ.க மீது உள்ள கோபத்தின் வெளிப்பாடே இது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi

மாலை மலர்

புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் மற்றும் புல்புர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றது. அதே போல, பீகாரின் அரோரியா தொகுதியில் பா.ஜ.கவை வீழ்த்தி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றது. கோரக்பூர் மற்றும் புல்புர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் டெபாசிட் இழந்தது.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பா.ஜ.க மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை மறுகட்டமைக்க வேண்டியது உள்ளது. ஆனாலும், அது ஒரே இரவில் சாத்தியமில்லை” எனவும் அவர் கூறியுள்ளார். #RahulGandhi #UPByPolls