மின் கம்பத்தில் செல்வி கட்டி வைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம். 
செய்திகள்

விருத்தாசலம் அருகே பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இரு குடும்பத்தாருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

விருத்தாச்சலம்:

விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி செல்வி (வயது 45).

இவர்களது மகன் அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி (60) என்பவரது மகளுடன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எங்கேயோ சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் ஒரு வீட்டின் முன்பு செல்வி நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கொளஞ்சி, ஏன் என் மகளை உன் மகன் இன்னும் வீட்டுக்கு அழைத்து வந்து விடவில்லை? எனக் கேட்டு செல்வியை தகாதவார்த்தைகளால் திட்டினார். பின்னர் அங்கு இருந்த மின்கம்பத்தில் அவரை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று செல்வியை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொளஞ்சியைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.