புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். முதலில் மறைமுகமாக இருந்த இந்த காதல் பின்னர் வெளிப்படையாக இருந்தது.
4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் ஓய்வு கேட்டு இருந்தார். இவர்களது திருமணம் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் 11-ம் தேதி நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த தகவலை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் டுவிட்டரில் தெரிவித்தனர்.
விராட் கோலி, ஒரு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வைர மோதிரத்தை அனுஷ்கா சர்மாவுக்கு திருமண பரிசாக அளித்தார். ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல வைர நகை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த மோதிரத்தின் விலை சுமார் ஒரு கோடி ருபாய் என திருமண ஜோடிக்கு நேருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இது திருமணம் நடைபெற்ற சொகுசு விடுதிக்கு செலவிடப்பட்ட தொகையை விட அதிகமானதாகும்.