வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ததில், இந்த புகைப்படம் ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பீகார் மாநில வெள்ள பாதிப்பில் எடுக்கப்பட்டது என கூறி இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "மக்களால் புறக்கணிக்கப்படுவது, பெரிய விஷயமில்லை. கேரளா, மும்பை இல்லாமல் இது பீகார் என்பதால் உதவி வரவில்லை. உண்மை சோகம், பீகார் மூழ்குகிறது" என கூறப்பட்டுள்ளது.
புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்ததில் இதே புகைப்படத்தை பல செய்தி நிறுவனங்கள் ஆஸ்திரேலிய வெள்ள பாதிப்புகள் சார்ந்த செய்திகளில் பயன்படுத்தி இருக்கின்றன. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதிகளில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
கெட்டி இமேஜஸ் வலைத்தளத்தில் இதே புகைப்படம் "TOWNSVILLE, AUSTRALIA - FEBRUARY 04:..." எனத்துவங்கும் பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தளத்தில் புகைப்படத்துடன் ஆஸ்திரேலிய வெள்ள பாதிப்பு பற்றிய விவரங்களும் பதிவிடப்பட்டுள்ளது.