சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவி வழிபாடு செய்து பின்னர் கடலில் கரைப்பார்கள்.
சென்னை முழுவதும் 2 ஆயிரத்து 600 விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3 கூடுதல் கமிஷனர்கள் தலைமையில், 10 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பூஜை முடிந்த பிறகு 5, 7, 8 ஆகிய மூன்று நாட்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக சென்று கடலில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களான எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களில், கிரேன்கள், உயிர் காக்கும் குழுக்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதிதிட்டம் தீட்டி இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உளவு பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைக்கும் இடங்களிலும், ஊர்வலம் செல்லும் வழித் தடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் விழாக்குழுவினருடன் போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.