சிவப்பு மண்டலம் 
செய்திகள்

சிவப்பு மண்டலத்துக்கு மாறியது- கொரோனா பீதியில் விழுப்புரம் மக்கள்

விழுப்புரம் மாவட்டம் சிவப்பு மண்டலத்துக்கு மாறியுள்ளதால் கொரோனா தடுப்பு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலமாக மாறியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மாலை மலர்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் குறைவாகவே இருந்தது. அதன் பின்னர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று விழுப்புரம் திரும்பியவர்கள் மூலம் கொரோனா வேகமெடுக்க தொடங்கியது. அதன் பின்னர் டெல்லி சென்று வந்தவர்கள் குணமடையும் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் சற்று நிம்மதியடைந்த விழுப்புரம் மக்களுக்கு அதன் பின்னர் அதிர்ச்சி காத்திருந்தது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவியதால் அங்கிருந்து 700 பேர் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தனர். இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது. இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால் ஒரு வாரத்திலேயே ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது.

இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு மகாராஷ்டிரா, டெல்லி, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. நாளுக்கு நாள் 5,6,8, என்ற எண்களின் அடிப்படையில் உயர்ந்து வந்த கொரோனா தொற்று தற்போது 385-ஐ எட்டியுள்ளது. 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மீண்டும் விழுப்புரம் மாவட்டம் சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது. மாவட்டத்தில் தற்போது 327 பேர் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் சிவப்பு மண்டலத்துக்கு மாறியுள்ளதால் கொரோனா தடுப்பு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் கொரோனா பாதித்த பகுதிகளில் நேரில் சென்று கொரோனாவின் விளைவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று மாலை விழுப்புரம் சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். பின்னர் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி எச்சரித்து அனுப்பினார். பின்னர் அவர்களிடம் இனி முகக்கவசம் அணியாமல் வந்தால் வழக்கு பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார். விழுப்புரம் சிவப்பு மண்டலமாக மாறியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.