தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு சாத்தனூரில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் 119 அடி உயரத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த கன மழைக்கு சாத்தனூர் அணை முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது.
இதையடுத்து, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களின் பாசன வசதிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலை 9 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் செய்யாறு தூசி மோகன் மற்றும் செங்கம் கிரி மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் உமா மகேஸ்வரி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் ராஜன், செல்வராஜி, கேசவராஜ், ராஜேஷ் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
சாத்தனூர் அணையின் இடது புறக் கால்வாயில் விநாடிக்கு 350 கன அடி வீதமும், வலதுபுறக் கால்வாயில் விநாடிக்கு 220 கன அடி வீதமும் என மொத்தம் 570 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் தொடர்ந்து மே மாதம் 8-ந் தேதி வரை 90 நாட்களுக்கு திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.