செய்திகள்

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம்- விழுப்புரம் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கைதான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்ககோரியும் விழுப்புரத்தில் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

விழுப்புரம்:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருநாவுக்கரசு (வயது 27), சபரிராஜன் (27), சதீஷ் (27), வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண்களை ஆபாசபடம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்ககோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அரசு கலை கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் வந்தனர்.

பின்பு அவர்கள் பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கைதான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்ககோரியும் இன்று அவர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.