செய்திகள்

வில்லாபுரத்தில் மாநகராட்சி குப்பை லாரி டிரைவருக்கு கத்திக்குத்து

வில்லாபுரத்தில் மாநகராட்சி குப்பை லாரி டிரைவரை கத்தியால் குத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவனியாபுரம்:

மதுரை பெருங்குடியை அடுத்த வலையங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40). மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் குப்பை லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். ஓய்வு நேரத்தில் சொந்தமாக ஷேர் ஆட்டோ வைத்தும் ஓட்டி வருகிறார்.

நேற்று இரவு சுப்பிரமணி ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் சென்றார். வில்லாபுரம் அருகே சென்றபோது மற்றொரு ஷேர் ஆட்டோ முந்தி செல்ல முயன்றது. அப்போது இரு ஆட்டோக்களும் உரசிக் கொண்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த காமராஜர்புரத்தைச் சேர்ந்த போஸ் (38), பொன்னுச்சாமி (36) இரும்பு கம்பி மற்றும் கத்தியால் சுப்பிரமணியை தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவரது மனைவி சுதா கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேர்ஆட்டோ டிரைவர்களான போஸ், மற்றும் பொன்னுசாமியை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT