அவனியாபுரம்:
அவனியாபுரத்தை அடுத்துள்ள பெருங்குடி பகுதியில் அம்பேத்கர் நகர். கணபதி நகர், விருசமரத்து ஊரணி, மீனாட்சி நகர் பகுதிகளுக்கு கடந்த 3 மாதத்திற்கும் மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் பெண்கள் குடி தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டனர். குடம் தண்ணீர் ரூ.20-க்கு விற்கப்படுகிறது.
மேலும் இந்தப்பகுதியில் தனியார் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிதண்ணீரை லாரி மூலமாக ஆஸ்பத்திரி, ஓட்டல்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
இதனால் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. இதனை கண்டித்து பொதுமக்கள் விமான நிலைய சாலையை முற்றுகையிட முடிவு செய்தனர்.
இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திண்டுக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். கார் மூலம் புறப்பட்ட அவரை கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. பீர் முகைதீன், இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் முற்றுகையிட சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
முடிவில் பெருங்குடி பகுதிக்கு லாரி மூலமாக குடிதண்ணீர் வழங்கவும் மேலும் 4 இடங்களில் போர்வெல் போடுவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பின்னர் கூட்டத்தினர் கலைந்து சென்றனர். #TNGovernor #BanwarilalPurohit