கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த ஊராட்சி மன்ற தலைவர்களை படத்தில் காணலாம். 
செய்திகள்

கிராம ஊராட்சிகளுக்கு காவிரி குடிநீரை அதிகப்படுத்தி வழங்க வேண்டும்- கலெக்டரிடம் மனு

கிராம ஊராட்சிகளுக்கு வழங்கும் காவிரி குடிநீரை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என எருமப்பட்டி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மாலை மலர்

நாமக்கல்:

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 24 ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று கூட்டமைப்பு தலைவர் பாஸ்கரன் தலைமையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் மெகராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- 

கிராம ஊராட்சிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 15-வது நிதிக்குழு மானிய தொகைக்கு ஊராட்சிகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு ஊராட்சி தலைவர்களால், ஊராட்சி அலுவலகத்தில் டெண்டர் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

14-வது நிதிக்குழு மானிய தொகையில் ஊராட்சிகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிகள் மட்டும் செய்வதற்கு அனுமதி வழங்கிட வேண்டும். இந்த தொகையை வேறு எந்தவித செலவினங்களுக்கும் பயன்படுத்த கூடாது. இதேபோல் குடிநீர் கட்டணத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறுகிறார்கள்.

இந்த காலி பணியிடங்களில் புதிய பணியாளர்களை நியமனம் செய்ய ஊராட்சி தலைவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பொது நிதியில் இருந்து அதிகமான செலவினங்கள் மேற்கொண்டு உள்ளதால், ஊராட்சி பொது நிதி கணக்கிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

கிராம ஊராட்சிகளுக்கு 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள மக்கள் தொகையை கணக்கீடு செய்து, காவிரி குடிநீரை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.