கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 18 கிராம நிர்வாக அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மாற்றப்பட்டவர்களில் 9 பேர் கொடைக்கானல் தாலுகாவை சேர்ந்தவர்கள்.
கொடைக்கானல் தாலுகாவிற்குட்பட்ட கொடைக்கானல் நகரம், பூண்டி, கூக்கால், பூம்பாறை, மன்னவனூர், வடகவுஞ்சி, அடுக்கம், பண்ணைக்காடு, காமனூர் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த வி.ஏ.ஓ.க்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.
இதேபோல் மற்ற பகுதிகளில் இருந்தும் 9 கிராம நிர்வாக அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த திடீர் இடமாற்றத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது. இடமாற்றம் செய்யப்பட்ட 18 பேரும் கலெக்டர் விஜயலட்சுமியை நேரில் சந்தித்து முறையிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.