செய்திகள்

முழு அடைப்பு போராட்டம் - விக்கிரமராஜா ஆதரவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக விக்கிரமராஜா கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சுப்ரீம்கோர்ட்டு இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களின் ஒருமித்த வேண்டுகோளை ஏற்று, நாளை (5-ந்தேதி) நடைபெற உள்ள பொதுவேலை நிறுத்தத்திற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தார்மீக ஆதரவை முழுமையாக அளிப்பது என முடிவு எடுத்துள்ளது.

எனவே வருகிற 9-ந் தேதி சுப்ரீம்கோர்ட்டின் மேல் முறையீட்டில் தமிழகத்தின் கடுமையான அழுத்தத்தையும், நெருக்கடியையும் மத்திய அரசுக்கு மேலும் தரும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும், வணிகர்களும், பொது மக்களும் இறுதி வேலை நிறுத்தமாக தமிழகத்தில் அமைவதற்கு அனைவரும் துணைநிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை- காஞ்சீபுரம் மண்டல ஆலோசனைக் கூட்டம் வேலப்பன்சாவடியில் மண்டல தலைவர் ஜோதிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் விக்கிரமராஜா பங்கேற்று முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் கோவிந்த ராஜுலு, பொருளாளர் சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர்கள் வி.பி. மணி, ராஜ்குமார், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாவட்ட தலைவர்கள் என்.டி.மோகன், அயனாவரம் சாமுவேல், ஆதிகுருசாமி, ரவி, ஜெயபால், அமல்ராஜ் கலந்து கொண்டனர். #tamilnews