செய்திகள்

பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக பஸ்ஸில் பயணம் செய்த விஜயகாந்த்

தமிழக அரசுப்பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மாநகரப் பேருந்தில் பயணம் செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக அரசு கடந்த 19-ந் தேதி அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. மாநகர பஸ்களில் 3 ரூபாயாக இருந்த குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயாகவும் அதனுடன் விபத்து காப்பீடு மற்றும் சுங்க வரிக்காக கூடுதலாக 1 ரூபாயும் சேர்த்து 6 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. இதுபோல் வெளியூர் பஸ்கள், விரைவு பஸ்கள், குளிர் சாதன பஸ்கள் என ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறு கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்த கட்டண உயர்வுக்கு எதிராக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியல், கல்லூரி புறக்கணிப்பு என போராட்டங்களில் இறங்கினர். மேலும், தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று மாநிலம் தழுவிய அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையொட்டி, பஸ் கட்டண உயர்வுக்கு தே.மு.தி.க சார்பில் இன்று பல்லாவரத்தில் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்ள அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வருகை தந்தார். கட்டண உயர்வுக்கு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் விஜயகாந்த், ஆலந்தூரிலிருந்து பல்லாவரத்துக்குப் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, தனது சட்டை பையில் இருந்து 500 ரூபாய் எடுத்து, தொண்டர்களுக்கும் சேர்த்து அவர் டிக்கெட் எடுத்தார்.