பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 35 இடங்களில் கடந்த ஏப்ரல் 7-ந் தேதி நடத்தப்பட்ட சோதனைகளின் அடுத்தக்கட்டமாக அவரது சொத்துகள் அனைத்தையும் முடக்கி வருமானவரித்துறை ஆணையிட்டுள்ளது. வருமானவரித்துறை நடவடிக்கை வரவேற்கத்தக்கது. விசா ரணையின் அடுத்தக்கட்டமாக விஜயபாஸ்கர் எந்த நேரமும் கைது செய்யப்படக்கூடும். இப்படிப்பட்ட ஒருவர் அமைச்சராக நீடிப்பது முறையல்ல.
அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பட்டியலிட முடியாத அளவுக்கு புகார்கள் உள்ளன. எனவே உடனடியாக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருமான வரித்துறையின் மூலம் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. ஒரு அமைச்சருக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியிருப்பது என்பது தமிழக அரசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சூழலில் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் இன்னும் நீடிப்பது நல்ல அரசுக்கு ஏற்புடையது அல்ல.
விஜயபாஸ்கர் தான் வகிக்கும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் நேரிடையாக தலையிட்டு அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.