செய்திகள்

நாடு கடத்தல் வழக்கு: இங்கிலாந்து கோர்ட்டில் விஜய்மல்லையா ஆஜர்

லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் விஜய்மல்லையா ஆஜரானார்.#VijayMallaya

லண்டன்:

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தவில்லை. அதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க இவர் லண்டனுக்கு தப்பி ஓடினார். தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

எனவே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரி இங்கிலாந்திடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து அவர் லண்டனில் ஸ்காட்லாந்து போலீசார் கடந்த ஏப்ரல் 18-ந்தேதி கைது செய்தனர்.

ஆனால் ரூ.5 கோடி ஜாமீன் தொகை செலுத்தி கைதான 3 மணி நேரத்தில் விஜய் மல்லையா வெளியே வந்தார்.

இதற்கிடையே, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விஜய்மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நடந்தது.

அதில் விஜய்மல்லையா நீதிபதி எம்மா ஆர் புத்தூட் முன்பு நேரில் ஆஜரானார். அப்போது இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களையும், வாத பிரதிவாதங்களையும் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். #VijayMallaya #TamilNews