யாழ்ப்பாணம்:
இலங்கையின் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி வித்யா கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி பள்ளிக்கு சென்று வீடு திரும்பியபோது அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொடூரமாக கொலை செய்தது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 5 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 4 பேர் மீது சதித்திட்டம் தீட்டியது மற்றும் உடந்தையாக இருந்தாக குற்றம்சாட்டப்பட்டது.
யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்ற முக்கிய குற்றவாளி சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். 30 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பு வெளியாவதையொட்டி நீதிமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.