மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோ அரசியல் மற்றும் மத ரீதியிலான பொய் தகவல்களுடன் பரப்பப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோவிற்கு, '8-10 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை எப்படி தாக்குகின்றனர் என பாருங்கள். 50 ரூபாய்க்கு கிடைக்கும் காவி துண்டு எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. இது தான் மோடியின் புதிய இந்தியாவா? இதுபோன்ற சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. இதுபோன்ற நபர்கள் கொடூரமானவர்கள்' எனும் தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததில், மத்திய பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவிற்கு அரசியல் மற்றும் மதரீதியிலான தொடர்பு துளியும் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது. வீடியோவில் இருக்கும் நபர்கள் பெண்ணின் குடும்பத்தார் ஆவர். இந்த வீடியோ ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அதிகம் பரப்பப்படுகிறது.
வீடியோவில் இருந்து ஸ்கிரீன்ஷாட்களை கூகுளில் தேடியதில், உண்மை விவரங்கள் வெளியாகின. அதில் ஜூன் 30 ஆம் தேதியிட்ட தி இந்து இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரங்கேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் வீடியோவில் தாக்கப்படும் பெண் வேற்று சாதியை சேர்ந்த வாலிபருடன் ஓடிவிட்டதால், குடும்பத்தார் பெண்மனியை சரமாரியாக தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தார் மாவட்டத்தின் பாக் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வீடியோவில் பெண்ணை தாக்கியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்புவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பலமுறை போலி செய்திகள் பலர் உயிரிழக்கவும் காரணமாக இருந்திருக்கின்றன.