சென்னை:
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிதலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பி.துரைசாமி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
அவரிடம் நிருபர்கள், கடந்த காலங்களில் துணை வேந்தர்கள் நியமனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் கை மாறியுள்ளதாக கவர்னர் பன்வாரிலால் எழுப்பியுள்ள புகார் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து துணை வேந்தர் துரைசாமி கூறியதாவது:-
தகுதி அடிப்படையில் தான் துணை வேந்தர் நியமனம் நடைபெற்று வருகிறது. அப்போதைய கவர்னர் வித்யாசாகர்ராவ் இருக்கும் போது தான் நான் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டேன்.
அதாவது துணை வேந்தர் பதவிக்கான நேர்முகத்தேர்வில் 3 பேர் பங்கேற்றோம். இதில் விதிமுறைகளின் படி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தான் இப்பதவி கிடைக்கப்பெற்றேன். இதில் எவ்வித பணப்பரிமாற்றமோ, சிபாரிசுகளோ நடைபெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.