செய்திகள்

பயம் காரணமாக தினகரன் மீது பொய் வழக்கு: வெற்றிவேல் எம்.எல்.ஏ. தாக்கு

பயத்தின் காரணமாக தினகரன் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்கள் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறி உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆட்சியில் இருக்கும் திமிரிலும், மமதையிலும் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அவர்களது அழிவை அவர்களே தேடிக் கொள்கிறார்கள்.

அராஜக ஆட்சி நடத்துகிறார்கள். அதைத்தான் தினகரன் விமர்சிக்கிறார். ஆனால் பயத்தின் காரணமாக தினகரன் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்கள். இதற்காக நாங்கள் முன்ஜாமீன் வாங்க போவதில்லை. கைது செய்யட்டும். அப்புறம் பார்க்கலாம்.

எங்கள் வழி தனி வழி. நாங்கள் அம்மாவின் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற போராடுகிறோம். தினகரனை கைது செய்ய தனிப்படை என்கிறார்கள். அவர் என்ன தீவிரவாதியா? ஒரு இன்ஸ்பெக்டரும், 2 போலீஸ்காரர்களும் வருவதற்கு பெயர் தனிப்படையா?

சசிகலா பரோலில் வருவது முழுக்க முழுக்க தனிப்பட்ட விசயம். அதற்கும் அரசியலுக்கும் முடிச்சு போடக்கூடாது.

அவர் வெளியே வரும் போது சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும். அதனால் தான் தினகரனை கைது செய்யப் போகிறார்கள் என்பது எல்லாம் கற்பனை. அவர் தனிப்பட்ட முறையில் பரோலில் வருவதால் சட்டம்-ஒழுங்கு எப்படி பாதிக்கும்.

அவர் வருவதால் அரசியல் தாக்கம் ஏற்படுமா என்பதெல்லாம் இப்போது சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் எல்லாம் சசிகலாவை சந்திப்போம். அதுவும் அரசியல் ரீதியான சந்திப்புதான்.

இவ்வாறு அவர் கூறினார்.