செய்திகள்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதி

எதிர்நீச்சல், வெள்ளிவிழா, இருகோடுகள் உள்ளிட்ட பல படங்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி(73) உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

குறிப்பாக, 1960,1970 மற்றும் 1980-களின் துவக்க காலத்தில் அன்றைய முன்னாள் கதாநாயகர்கள் பலருடன் இவர் ஜோடியாக நடித்தார். கன்னட நடிகர் ராஜ்குமாருடன் மட்டும் 45 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

எதிர் நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள், வெள்ளிவிழா, பாமா விஜயம், புன்னகை, வெள்ளிவிழா, கண்ணா நலமா? போன்ற படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் திறம்பட நடித்திருந்தார்.

எம்.ஜி.ஆருடன் படகோட்டி மற்றும் முகராசி ஆகிய படங்களில் நடித்தார். சிவாஜி கணேசனுடன் கர்ணன், இருவர் உள்ளம் உள்ளிட்ட படங்களிலும் தமிழில் ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் ஆகியோருடன் அதிகமான படத்திலும் நடித்துள்ளார்.

சிறந்த நடிகை மற்றும் துணை நடிகைக்கான கர்நாடக மாநில அரசின் தேசிய விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் பலமுறை பெற்றுள்ள ஜெயந்தி, மிஸ் மாலினி படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கையால் தேசிய விருதையும் பெற்றார்.

தனது முதல் கன்னடப் படமான ‘ஜீனு கூடு’ படத்தை இயக்கிய பெக்கெட்டி சிவராமை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியருக்கு கிருஷ்ண குமார் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், பெங்களூரு நகரில் வாழ்ந்துவரும் ஜெயந்திக்கு இன்று காலை திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஸ்துமா தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கும் டாக்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கவனித்து வருகின்றனர்.