மரத்தின் மீது மோதிய மினி லாரியை படத்தில் காணலாம். 
செய்திகள்

வேப்பூர் அருகே விபத்து- கல்லூரி மாணவி உள்பட 4 பேர் பலி

வேப்பூர் அருகே மரத்தில் மினி லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உள்பட 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெட்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). விவசாயி.

இவரது உறவினர் வேப்பூர் அருகே உள்ள நிராமணி கிராமத்தில் இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து சீனிவாசன், அவரது மகள் ஜீவா (19), மற்றும் உறவினர்கள் ஜெயராமனின் மனைவி அமுதா (40), கலியம்மாள் (55), தமிழரசன் (52) உள்பட 30 பேர் இன்று காலை ஒரு மினி லாரியில் நிராமணிக்கு புறப்பட்டனர்.

மினி லாரியை அதே பகுதியை சேர்ந்த செல்வம் (40) என்பவர் ஓட்டிச் சென்றார். சேலம்- விருத்தாசலம் சாலையில் வேப்பூர் கூட்ரோடு அருகே சென்றபோது மினி லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர் சாலையோரம் நின்ற புளிய மரத்தில் மோதி கவிழ்ந்தது. மினி லாரியில் இருந்தவர்கள் கூச்சல் போட்டு அலறினர். இந்த விபத்தில் மினி லாரியின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது.

மினி லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி அதில் இருந்த அமுதா, ஜீவா, கலியம்மாள், தமிழரசன் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

விபத்தில் இறந்த ஜீவா சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Tamilnews