நாட்டின் வரைபடம் அடங்கிய ஒரு புத்தக கையேட்டை காங்கிரஸ் கட்சி நேற்று லக்னோவில் வெளியிட்டது. ராஷ்டீரிய சுரக்க்ஷா பர் ஆன்ச் என்ற தலைப்பிலான அந்த புத்தகம் 16 பக்கங்களை கொண்டது. அதில் 12வது பக்கத்தில், ஜம்மு-காஷ்மீர் முழுவதையும் இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என குறிப்பிட்டுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான 3 வருட ஆட்சியில் ஏற்பட்டுள்ள தோல்விகளை சுட்டிக் காட்டும் வகையில் லக்னோ நகரில் எதிர்க்கட்சிகள் நடத்திய மாநாட்டில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி வெங்கையா நாயுடு, ‘கடந்த 3 வருடங்களாக புதிய இந்தியா உருவாக்கத்தினை நாட்டு மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கும் வேளையில், காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ புத்தக கையேட்டில் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என பதிவிட்டு வெளியிடப்பட்டுள்ளது’ என கூறினார்.
சமீபத்தில், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு ஓர் இறுதி முடிவிற்கு வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது என்பதனையும் அவர் சுட்டிக் காட்டினார்.
‘அவர்களது மனதில் இறுதி முடிவு என்பது காஷ்மீரை பாகிஸ்தானிடம் கொடுத்து விட வேண்டும். அதனால் நாம் அனைவரும் நிம்மதியுடன் வாழலாம் என்று உள்ளது. இந்த எண்ணம் நேற்று லக்னோ நகரில் அவர்கள் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ புத்தக கையேட்டில் பிரதிபலித்துள்ளது.
இதற்காகவா நமது இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரமிக்க நமது நூற்றுக்கணக்கான வீரர்கள் கடந்த வருடங்களில் தங்களது உயிரை இழந்தனர்?