கைது 
செய்திகள்

வெங்கல் அருகே பெட்ரோல் பங்க் கொள்ளையில் 2 வாலிபர்கள் கைது

வெங்கல் அருகே பெட்ரோல் பங்க் கொள்ளையில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பெரியபாளையம்:

வெங்கல் அருகே உள்ள பூச்சி அத்திப்பட்டு பகுதியில் அம்பத்தூரை சேர்ந்த ஏ.கே.மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது.

கடந்த 13-ந் தேதி நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கத்தி முனையில் ஊழியர்களை மிரட்டி ரூ. 1½ லட்சத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

கொள்ளையர்களை பிடிக்க ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் உத்தரவின்படி வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த சோழவரம் எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சதீஷ், சக்திவேல் ஆகிய 2 பேரையும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

அப்போது தப்பி ஓட முயன்ற போது அவர்களது கை, காலில் முறிவு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டு போடப்பட்டுள்ளது.

கைதான 2 பேரிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களது கூட்டாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

பிடிபட்ட சதீஷ் மீது 4 குற்ற வழக்குகளும், சக்திவேல் மீது 3 குற்ற வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.