செய்திகள்

வெனிசுலா அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் நிக்கோலஸ் மதுரோ

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றிய நிக்கோலஸ் மதுரோ இன்று பதவி ஏற்றுக்கொண்டார். #Madurosworn #Venezuelapresident

கராகஸ்:

வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்தார். சமீபத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.

இதையடுத்து அதிக சிரமம் இன்றி நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றினார். இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. மதுரோவின் வெற்றி ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது.

மேலும், மதுரோவின் வெற்றியைத் தொடர்ந்து வெனிசுலா மீது புதிய பொருளாதார தடையையும் அமெரிக்கா விதித்தது.

இந்நிலையில், இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், அரசியலமைப்புச் சட்டத்தினை பாதுகாப்பேன் என்றும், புரட்சிகர வழிமுறைகள் மூலம் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று சத்திய பிரமாணம் செய்தபடி, அடுத்த 6 ஆண்டுகளுக்கான அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவியேற்றார்.

மீண்டும் அதிபராக மதுரோ பதவியேற்றாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே அவரது ஆட்சிக்காலம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது #Madurosworn #Venezuelapresident

SCROLL FOR NEXT