செய்திகள்

வேலூரில் கட்டிட மேஸ்திரி வெட்டிக் கொலை

வேலூரில் வீடு புகுந்து கட்டிட மேஸ்திரியை 3 பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் தொரப்பாடி மேட்டுப்பாறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது30) கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சர்மிளா.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் இவர்கள் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்த கொண்டனர். தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இரவு கோபி மது அருந்தி விட்டு வீட்டில் படுத்து தூங்கினார். இரவு 11.30 மணிக்கு 3 பேர் கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்தனர்.

தூங்கிக் கொண்டு இருந்த கோபியை அந்த கும்பல் கத்தியால் வெட்டினர். சத்தம் கேட்டு எழுந்த அவரது மனைவி, குழந்தைகள் அலறி கூச்சலிட்டனர். அதனை கண்டு கொள்ளாத கும்பல் கோபியின் தலையில் மாறி மாறி வெட்டினர். இதில் பலத்த காமயடைந்த கோபி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் கொலை கும்பல் தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கோபியின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த வீட்டில் வெட்டப்பட்ட சுண்டு விரல் கிடந்தது.

கொலை செய்த கும்பலை சேர்ந்தவர்களின் விரல் என கூறப்படுகிறது. அதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கினர். அவருடன் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கோபியின் மனைவி சர்மிளாவின் சகோதரருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்த கும்பல் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் கொலை கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.