செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்திய 4 லாரி உள்பட 10 வாகனங்கள் பறிமுதல்: 8 பேர் கைது

வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்திய 4 லாரி உள்பட 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க போலீசார் பாலாற்று பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் மாமண்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த 4 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சிந்தன கணவாய் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 24). காஞ்சீபுரம் மாவட்டம் அம்பிபுதூரை சேர்ந்த புருஷோத்தமன் (37), சக்கரவர்த்தி (28) வந்தவாசி தாலுகா ஜெகதாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (29) ஆகியோரை கைது செய்தனர்.

மேல்பட்டி போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றபோது டிராக்டரில் மணல் கடத்தி வந்த பாலூரை சேர்ந்த முரளி (35) என்பவரை கைது செய்தனர். டிராக்டர் பறிமுதல் செய்யபட்டது.

நெமிலி பகுதியில் மணல் கடத்தி சென்ற 2 டிராக்டர்களை நேற்று இரவு நெமிலி போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட ரமேஷ் (30), விநாயகமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். விரிஞ்சிபுரத்தில் பாலாற்றில் மணல் கடத்தி வந்த மினி லாரி பறிமுதல் செய்யபட்டது.

இது தொடர்பாக மோட்டூரை சேர்ந்த விக்னேஷ் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திருவலத்தில் மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.