செய்திகள்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபருக்கு அடி - உதை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை சென்னை செல்லும் பஸ்சில் பயணிகள் கூட்டமாக ஏற முயன்றனர். இந்த கூட்டத்தில் புகுந்த 3 பேர் பயணிகளிடம் செல்போன் திருட முயன்றனர். அப்போது ஒரு வாலிபரை கவனித்த பயணிகளில் ஒருவர் கூச்சலிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் வாலிபரை மடக்கி பிடித்தனர். இதை பார்த்த கூட்டாளிகள் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களையும் பொதுமக்கள் விரட்டி சென்றனர். ஆனால், அவர்கள் அருகிலுள்ள பாலாற்றின் சுடுகாட்டு பகுதிக்கு ஓடிவிட்டனர்.

பிடிபட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு போலீசார், அந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வாலிபர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அசம்பா விதங்களை தவிர்க்க குறிப்பிட்ட நாளில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் பஸ் நிலையத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் உட்பட பெரும்பாலான மின்விளக்குகள் பழுதாகி கிடக்கிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே புதிய பஸ்நிலையத்தில் பழுதான மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.