செய்திகள்

வேடசந்தூர் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

வேடசந்தூர் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.

மாலை மலர்

வேடசந்தூர்:

திண்டுக்கல் அருகே வேடசந்தூர் பாரதிநகரில் சவடமுத்து என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சி செய்யும் குடோன் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு இடங்களில் இருந்து பெறப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரித்து மறு சுழற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை திடீரென பிளாஸ்டிக் குடோனில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. குடோன் முழுவதும் பரவியதால் அப்பகுதி முழுவதும் இரவிலும் பகல் போல் காட்சியளித்தது.

இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நேரம் போராடியும் தீயை அணைக்க முடியாததால் திண்டுக்கல்லில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு போராடி தீயை அணைத்தனர்.

இருந்தபோதும் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.