வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் குமார்ராஜா. இவரது மகன் மணிகண்டன் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை காந்திநகர் பிரிவு அருகே திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று, மணிகண்டன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. கார் மோதியதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.