செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர் பணி: 2-ம் கட்ட கலந்தாய்வு 19-ந்தேதி நடக்கிறது - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது

சென்னை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்காக கடந்த 12.11.2015 அன்று விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இப்பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த 28.2.2016 அன்று நடைபெற்றது.

தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரம் கடந்த 1.7.2016 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதில் நிரப்பப்படாமல் உள்ள 147 காலிப் பணி இடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 13.3.2017 முதல் 15.3.2017 வரை நடைபெற்றது.

தற்போது 2-ம் கட்ட கலந்தாய்வு சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெறும். 2-ம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவு எண் பட்டியல், தர வரிசை அடங்கிய கால அட்டவணை பட்டியல் அரசு பணியாளர் தேர்வாணையத்தின்

www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் வர தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.