செய்திகள்

வானூர் அருகே விவசாயி உயிரோடு எரித்து கொல்ல முயற்சி- வாலிபர் வெறிச்செயல்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே விவசாயியை உடலில் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை மலர்

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள இடையன்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன்(வயது 63). விவசாயி.

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஜோதி(28). இவர்களுக்கு இடையே குப்பை கொட்டுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி அவர்களுக்குள் தகராறும் ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று மாலை கண்ணதாசன் அங்குள்ள குளக்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஜோதி அங்கு வந்தார். திடீரென்று அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை திறந்து பெட்ரோலை அவரது தலையில் ஊற்றினார். பின்பு கண்ணதாசன் உடலில் தீ வைத்து விட்டு ஓடிவிட்டார்.

உடலில் தீ பிடித்ததும் கண்ணதாசன் கூச்சல்போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கண்ணதாசன் உடல் முழுவதும் தீயில் கருகியது.

உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்தசம்பவம் தொடர்பாக ஆரோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குபதிவு செய்து தலைமறைவாகிவிட்ட ஜோதியை வலைவீசி தேடி வருகின்றார்.

பெட்ரோல் ஊற்றி விவசாயியை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.