செய்திகள்

வானூர் அருகே பெண் போலீஸ் வீடு உள்பட 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை

வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக் கொண்டிந்த போது நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டில் நுழைந்து திருடிச்சென்ற இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள காட்ராம்பாக்கம் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஜீவா(வயது 30). இவர் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவில் ஜீவா பணிக்கு சென்று விட்டார். வீட்டில் ராஜேஷ் மற்றும் அவரது பெற்றோர் இருந்தனர். இவர்கள் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். காற்றுக்காக முன்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்தனர்.

இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் ராஜேசின் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் பீரோ வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றனர். பீரோவை உடைத்து அதிலிருந்த 1½ பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.12 ஆயிரத்து 500-ஐ திருடிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள அமுதா(37) என்பவர் வீட்டிலும் இந்த கொள்ளையர்கள் புகுந்தனர். அங்கு இருந்த 3 லேப்-டாப்களையும் திருடிசென்றனர்.

பின்னர் அருகில் உள்ள நாகராஜன்(35) என்பவரது வீட்டிற்குள் நுழைந்தனர். அவர் வீட்டில் இருந்த ½ பவுன் கம்மல் மற்றும் ரூ.700-ஐ திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். கொள்ளையர்கள் திருடிச் சென்ற பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இன்று காலை வீட்டில் உள்ளவர்கள் எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கிளியனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

3 வீட்டிலும் கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக் கொண்டிந்த போது நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டில் நுழைந்து திருடிச்சென்ற இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.