செய்திகள்

தண்ணீர் தொட்டியில் பிணம்: சாமியார் மடத்தில் சிறுவன் நரபலியா?

வாணியம்பாடி அருகே சாமியார் மடம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான். இதனால் சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியை அடுத்த மேல்நிம்மியம் பட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஹரிகேஷ் என்ற துளசி (2). சித்தப்பா வீட்டில் வளர்ந்து வந்தான்.

அந்த பகுதியில் ரவி என்பவர் சாமியார் மடம் அமைத்து 10 ஆண்டுகளாக பராமரித்து வருகிறார்.

மடம் அருகில் ரோட்டின் ஓரமாக 7 அடியில் தண்ணீர் தொட்டி அமைத்து அதற்குள் ஒரு ஆமையை வளர்க்கிறார். ரூபாய் நாணயங்கள் போட்டு வைத்துள்ளார். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு யாகம் நடத்தி வருகிறார்.

ஹரிகேஷ் வசிக்கும் வீட்டின் எதிரில் சாமியார் மடம் உள்ளது. ஹரிகேஷ் திடீர் என்று காணாமல் போனான்.

சாமியார் மடத்தின் வெளியே தண்ணீர் தொட்டி கீற்றுச் கொட்டையால் மூடப்பட்டிருந்ததை திறந்து பார்த்தபோது அங்கு ஹரிகேஷ் நீரில் மூழ்கி பிணமாக கிடந்தான்.


தண்ணீர் தொட்டி கீற்றுக் கொட்டகையால் மூடப்பட்டிருந்ததாலும், அங்கு நாணயங்கள், ஆமை கிடந்ததாலும் சாமியார் ரவி மீது பொதுமக்களுக்கு சந்தேகத்தை எற்படுத்தியது.

நேற்று முன்தினம் இரவு பவுர்ணமி, சந்திர கிரகணம் என்பதால் சாமியார் ரவி சிறப்பு யாகம் நடத்த உள்ளதாக சிலரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாமியார் மடத்துக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.