பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வல்லூரில் தேசிய அனல் மின்நிலையம் உள்ளது.
தேசிய அனல் மின் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் வல்லூர் அனல் மின் நிலையம் செயல் படுகிறது. இங்கு 3 அலகுகள் உள்ளன.
இவற்றில் தலா 500 மெகாவாட் வீதம் 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் உள்ள கொதிகலன் குழாய் திடீரென பழுது அடைந்தது. இதனால் இங்கு உற்பத்தியாகும் 500 மெகா வாட் மின்சாரம் நிறுத்தப்பட்டது. 3-வது அலகு பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இங்கும் 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக வல்லூர் அனல் மின் நிலையத்தில் 1000 மெகா வாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. 2-வது அலகில் மட்டும் 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட கொதிகலன் குழாய்களை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.