அகமதாபாத்:
இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாக பதவி வகித்து, மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு நாட்டின் பல பகுதிகளில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில், குஜராத் மாநிலத்தின் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள ஷிரேதா கிராமத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை கடந்த 1992-ம் ஆண்டு பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே.அத்வானி திறந்து வைத்தார்.
இந்நிலையில், நேற்று பின்னிரவு வேளையில் இந்த சிலைக்கு காலி குளிர்பான பாட்டில்கள் மற்றும் புல் ஆகியவற்றால் ஆன மாலையை சில மர்மநபர்கள் அணிவித்துள்ளனர். இன்று காலை இதை கண்ட கிராமவாசிகள் அந்த மாலையை அகற்றியதுடன் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, சிலையின் அருகே காவல் பணிக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். #tamilnews #VallabhbhaiPatel #statuedefiled