ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை தி.மு.க. ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. ம.தி.மு.க.வின் நிலைப்பாடும் அதுதான். பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கூடாது. பாராளுமன்றத்துக்கு ஒரு அணிக்கு வாக்களித்த மக்கள் மாநில தேர்தல் வரும் போது மாற்றி அளிக்க வாய்ப்பு உள்ளது.
பல தேசிய இனங்களை கொண்ட இந்திய உப கண்டத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியமே கிடையாது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே இனம், ஒரு கலாசாரம் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி ஜனநாயகத்தை புல்டோசர் கொண்டு தகர்க்க பார்க்கிறார். சர்வாதிகார போக்குடன் கூடிய அவருடைய மனோபாவம் ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது.